விஜயதசமி. குரு வணக்க நாள். FB மூலமல்ல. நேரடியாய். குரு இருப்பின் அவர் பாதம் பணிந்து. இல்லையெனில் படத்தின் முன். குருவே இல்லையெனில் தட்சிணாமூர்த்தி ஹயக்ரீவர் நரசிம்மர்.

தட்சினை முக்கியம். 10 1/4 ரூபாய் குறைந்த பட்சம். எதற்கு. ஐயா கடன் பட்டேன் எனக் காட்டு. வேட்டி மேல் துண்டு சிலாக்யம் குரு திருடனாய் இருப்பினும் வணங்கலாம். உங்கள் நம்பிக்கை அவனையும் மாற்றி உங்களையும் உயர்த்தும்.

என்னது குரு வணக்கம். உள்ளிருத்தல். எதற்கு. உயர்வடைய. உயர்வாகி…? குருவாகுதல். இதுவே வாழ்வு சுழற்சி. ஆனால் உன்னுள் நீ நிலைக்கும் வரை உனக்கு போதிக்க அதிகாரமில்லை. இது அநேருக்கு தெரிவதில்லை.

தெரியாதவர் திண்டாடுவார். குருவாயிருத்தல்…சத்திய நிலை. இதற்கு மேல் வார்த்தையில்லை. சத்யமாயிருத்தலே அன்பு. தன்னை அது அன்பென்றும் சொல்லாது.

குரு வெறும் பேச்சு மட்டுமல்ல. பத்து இரண்டாம் கெட்டானுக்கு நடுவே குடுமி அவிழ்த்து சிலும்பல் அல்ல. அது பரிதவித்து எழுந்திருத்தல். Enormous energy loss. குரு மறுபடி தனித்திருந்து புதுபித்து கொள்ள வேண்டும். குரு விவாதிக்கிறவர் அல்ல. அவரே முதல் அவரே இறுதி. உன் படிப்பறிவு செல்லாது. அது பட்டறிவின் உச்சம் அது பட்டது உனக்குத்தெரியாது. நாளை விஜயதசமி மண்டியிடு. குழைந்து நில். அப்போதுதான் முளைக்கும்.

பேச்சுக்கு பேச்சு பதிலுக்கு பதில். இது கர்வம். புரியாததின் விளைவு. அமைதியில்லை. ஒரு முறையேனும் என் பேச்சுக்கு சரியென உட்கார். ஒருமுறையும் அமர்ந்ததில்லையே. நீ என்ன சீடை. வெறும் தட்டை. அசடு. படிப்பு வாந்தி. அகந்தை கிழங்கு. புத்தக மேட்டர்ஸ் எடுத்து போடுகிறவன் எல்லாம் பெரிய ஞானி ஆகிவிடுகிறான். வெறும் கிழிசல் கோணி. இதற்கும் கத்து. எகிறி குரை. உண்மை தைத்தால் உன் பதில் வேறு.

இந்த முறை பூஜை படு அமர்க்களமாக நடந்து முடிந்தது. என் ஈடுபாடு பற்றி கவனியாமல் மற்றவரை கவனித்து வந்தேன். கடவுள் நம்பிக்கை அடிப்படையில் இக்கொண்டாட்டங்கள் நடை பெறுகின்றன. பிறகு கடவுள் மறந்து கொண்டாட்ட நியதிகள் மட்டும் கவனம் பெறுகின்றன. யோசித்துப் பார்த்தால் நியதி (system) கடவுள் இரண்டும் ஒன்றே. இடது பக்கம் சரஸ்வதி வலது பக்கம் லக்ஷ்மி என்று ஏதோ நியமங்கள்.

நிறைய பேர் வீட்டில் இப்போது கொலு வைப்பதில்லை. காரணம் கடவுள் நம்பிக்கை கேள்விக்கு குறி. நல்லா படிச்சா நல்ல மார்க் நல்ல மார்க் நல்ல வேலை. இங்க கடவுள் எங்கே. இது பொம்மை சார் இதுவா என்ன காப்பாத்தும். காசுக்கு பிடிச்ச கேடு நவராத்திரி. முதிர்ந்த பெண்பிள்ளை பேசினார். துடைச்சு பெருக்கி சமைச்சு இறக்கி …போர். சுற்றியுள்ள உலகம் கேட்காத வண்ணம் காதில் பட்டன் அழுத்தி பாட்டு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்னமா இருக்கு ம்யூஜிக். ஐநூறு வருடத்து முன்பான பாட்டு ஆயிரம் வருடத்து முன்பான ராகம் அதேதான் இன்றும். ஆனால் அந்தப் பாரம்பரியம் தெரியாது. கல்யாணி காம்போதின்ன என்ன? பொம்மனாட்டி பேரு பதில் சொல்வார்கள். பழசை மறுதலித்து விட்டு என்னமா போடறான் என்பார்கள்.

சுக சுகாம ம்ருதங்க தாளமு…தாள சுகம் அதே. கருவி வேறு. எலக்ட்ரானிக்ஸ் அதிர்வு. உட்கார்ந்த இடத்தில் உடம்பு ஆடுகிறது. கடவுள் நம்பிக்கையும் இடம்மாறி இருக்கிறது. ஒத்தைக்கல், ஜோடி மரப்பாச்சி போய் தத்ரூப சாய்பாபா நெருக்கம். விஷயம் அதே. கிருஷ்ணர் ஏம்மா ஹாஃப் நேக்கட்டா இருக்கார்? குழந்தைக்கு அது ஶ்ரீ க்ருஷ்ணரா வேறு ஏதேனுமா? அம்மாவுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. கல்யாணி ராகம் ஒளிந்திருப்பதை கண்டுபிடிக்க முடியவில்லை.

நீங்கள் மாறவில்லை மாற முடியாது. பெரிசாய் நீட்டி முழக்கி ரசிப்பவர்களை உற்றுப் பாருங்கள்… சுய அலட்டல் அதிகமிருக்கும். அவரு ரசனை peak ஆம். அதைக் காட்றாராம். அட முண்டமே.

கடவுள் அறிதலும் காவியம் தெளிதலும் சங்கீதம் புரிதலும் அவ்வளவு எளிதா. உன்னுடையது மனச் சோம்பல்.. வேர் தேடா குணம். உலகத்தை உற்றுப்பார். ஏகத்துக்கும் கற்கலாம். நான் முதுகுதட்டி குறை சொல்வதேயில்லை.